Archives: ஜனவரி 2019

சுவிகாரப் புத்திரன்

சமுதாயத் தொண்டு செய்யும் ஒருவர் வீடற்ற குழந்தைகளுக்கென ஓர் இல்லம் கட்டியபோது, நான் மிகவும் மகிழ்ந்தேன். அத்தோடு நின்றுவிடாமல், அந்த மனிதன் அதையும் விட மேலாக அப்படிப்பட்ட வீடற்ற குழந்தைகளிலொன்றைத் தனக்குச் சொந்தமாக தத்தெடுத்துக் கொண்டபோது மெய்சிலிர்த்துப் போனோன். அநேக அனாதைக் குழந்தைகள் தங்களை ஆதரிக்க ஒரு வளர்ப்புத் தந்தை கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைவர். ஆனால், அந்த வளர்ப்புத் தந்தை தங்களுக்கு உதவுபவர் மட்டுமல்ல, தங்களைச் சொந்தமாக ஏற்றுக் கொள்கிறாரென கேட்கும்போது, அது அவர்களுக்கு எப்படியிருக்கும்?

நீயும் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், அது உனக்குச் கிடைத்த ஈவு என்பதை
நீ அறிந்திருக்கின்றாய். வெறுமனே, தேவன் நம்மை நேசித்ததினால் தம்முடைய ஒரேபேறான குமாரனை, "நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி" (யோவா. 3:16). அனுப்பியிருந்தால், அது நமக்குப் போதுமானது. நாம் தேவனைக் குறைகூறவும் முடியாது. ஆனால், அது தேவனுக்குப் போதுமானதாகயில்லை. “நம்மை மீட்டுக் கொள்ளத்தக்கதாக" தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார். அத்தோடு அது முடிந்து விடவும் இல்லை. ஆனால், “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி" (கலா. 4:4-5) தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்.

அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை “தேவனுடைய புத்திரர்" என்றே குறிப்பிடுகின்றார். ஏனெனில், அவருடைய நாட்களில் மகனுக்குத்தான் தந்தையின் சுதந்திரத்தையடையும் உரிமையிருந்தது. எந்த மனுஷனும், மனுஷியும் இயேசுவின் பேரில் விசுவாசமாயிருந்தால் அவர்களெல்லாரும் தேவனுடைய பிள்ளைகளென்கிற சுதந்தரத்தைப் பெறுகின்றோம் என பவுல் கூறுகின்றார் (வச. 7).

தேவன், வெறுமனே உன்னை மீட்கிறவர் மட்டுமல்ல, அவர் உன்னை நேசிக்கின்றார், உன்னைத் தன்னுடைய சொந்த குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றார். தன்னுடைய நாமத்தை உன்மேல் எழுதுகின்றார் (வெளி. 3:12). உன்னைத் தன்னுடைய பிள்ளையெனப் பெருமையாகக் கூறுகின்றார். இதைவிட மேலாக அன்புகூர நமக்கு யாரிருக்கின்றார்கள்? தேவனை விட முக்கியமானவராக நமக்கு யாரிருக்கக் கூடும்? நீ தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதோடு, அவருடைய பிள்ளையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டாய உன் தந்தை உன்னை நேசிக்கின்றார்.

பாசிகளும், நுண்பாசிகளும்

“நுண்பாசி என்பது என்ன?" என நான் என் சிநேகிதியைக் கேட்டேன். நான் அவளுடைய தோள்மீது சாய்ந்து, அவள் நுண்ணோக்கி மூலம் எடுத்துக் கொண்ட படங்களை, அவளுடைய அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தேன். “ஓ, இது பாசியைப் போன்றது. இதனைப் பார்ப்பது சற்றுக் கடினமானது. சிலவேளைகளில் லென்சுகளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டுக் கொண்டு தான் பார்க்க முடியும் அல்லது அவை இறந்த பின் தான் பார்கக் முடியும்" என விளக்கினாள். அவள், ஒன்றன் பின் ஒன்றாக படங்களைக் காட்டி விளக்கிய போது, நான் வியந்துபோனேன். நுண்ணோக்கிகளின் மூலம் பார்க்கக் கூடிய அத்தனை சிறிய உயிரினங்களில் தேவன் வைத்துள்ள நுணுக்கமான அமைப்புகளைக் குறித்து நினைத்துக் கொண்டேயிருந்தேன்.

தேவனுடைய படைப்புகளுக்கும் அவருடைய செயல்களுக்கும் முடிவேயில்லை. இதனைக் குறித்து யோபுவின் நண்பனான எலிகூகூட, யோபு தன் இழப்புகளின் மத்தியில் போராடிக் கொண்டிருந்தபோது அவனுக்கு சுட்டிக் காட்டுகின்றான். எலிகூ தன் நண்பனிடம்," யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்து நின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும். தேவன் அவைகளைத் திட்டம் பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ? மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைளையும்... அறிவீரோ?" (யோபு 37:14-16). தேவனுடைய படைப்புகளையும், அவற்றின் சிக்கலான நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள மனித அறிவு போதாது.

நாம் கண்களால் காணமுடியாத அவருடைய படைப்புகளும், தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய மகிமை நம்மைச் சூழ்ந்துள்ளது. நாம் எவற்றின் வழியே கடந்து சென்றாலும், அவைகளைக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியாவிட்டாலும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவரை நாம் இன்று போற்றுவோம், ஏனெனில், “அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறார்" (யோபு. 5:9).

வானங்களைக் கிழித்துக் கொண்டு

சமீபத்தில் நான் என்னுடைய சிநேதிதியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவள் தன்னுடைய விசுவாசத்தை விட்டு விட்டதாகவும், நாம் அடிக்கடி சொல்லக் கேட்டுள்ள ஒரு குற்றச் சாட்டைக் காரணமாகக் கூறினாள். ஒன்றுமே செய்யாமலிருக்கும் ஒரு தேவனை நான் எப்படி நம்புவது? எனக் கேட்டாள். இந்த துணிச்சலான கேள்வி நம்மில் அநேகருக்கு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோன்றலாம். நாம் தீவிரவாத செயல்களைக் குறித்துச் செய்தித்தாளில் வாசிக்கும் போதும், நம்முடைய உள்ளத்தை உடைக்கக் கூடிய காரியங்களின் வழியே கடந்து செல்லும் போதும் இத்தகைய கேள்வி நமக்கும் தோன்றலாம். என்னுடைய சிநேகிதியின் சார்பில் தேவன் செயல்பட வேண்டிய தேவையுள்ளது என்பதை அவளுடைய வேதனை வெளிப்படுத்தியது. நாம் அனைவருமே உணர்ந்திருக்கும் ஓர் ஏக்கம் அவளிடம் இருந்தது.

இஸ்ரவேலர் தங்களுடைய நிலப்பரப்பை நன்கு அறிவர். பாபிலோனிய பேரரசு இஸ்ரவேலரின் தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இஸ்ரவேலரை இரும்புக் கரம் கொண்டு நசுக்கி எருசலேமை தீக்கிரையாக்கி புகைந்து கொண்டிருக்கும் குப்பை மேடாக்கினர். நம்மை விடுவிக்கிறவராக இருந்த தேவன் எங்கே? (ஏசா. 63:11-15) என்ற கேள்வியோடிருந்த ஜனங்களின் இருண்ட உள்ளத்தில் ஏசாயா தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தைகளைப் போடுகின்றார். அதே இடத்திலிருந்தே ஏசாயா தைரியமாக ஒரு ஜெபத்தை ஏறெடுக்கின்றார். “தேவரீர் வானங்களைச் கிழித்திறங்கி... வாரும்" (64:1) என்கின்றார். ஏசாயாவின் வேதனையும், கவலையும் அவரை தேவனைவிட்டு விலகிப் போகச் செய்யவில்லை. ஆனால், அவர் இன்னும் அதிகமாக தேவனைத் தேடவும் அவரைக் கிட்டிச் சேரவும் செய்தது.

நம்முடைய சந்தேகங்களும் துன்பங்களும் நமக்கு ஒரு வித்தியாசமான ஈவைத் தருகின்றன. நாம் தேவனை விட்டு எவ்வளவு தூரமாய் காணாமல் போய் விட்டோமென்பதையும், தேவன் நம்மிடம் வரும்படியான தேவையில் இருக்கிறோமென்பதையும் அவை நமக்குக் காட்டுகின்றன. இப்பொழுது நாம் நடக்கக் கூடாததும், மறக்க முடியாததுமான கதைகளைக் காண்கின்றோம். இயேசுவின் மூலம் தேவன் வானங்களைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தார். கிறிஸ்து தன்னுடைய சொந்த சரீரத்தைக் கிழிக்கப்பட ஒப்புக் கொடுத்தார். எனவே அவருடைய அன்பினாலே அவர் நம்மை மேற்கொள்ள முடிந்தது. இயேசுவின் மூலம் தேவன் நம்மருகில் இருக்கின்றார்.

மனநிலையை சரிசெய்பவர்

நான் வாரந்தோறும் செல்கின்றபடி, இரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, வாடிக்கையாளர்கள் இரயிலில் ஏறுவதற்கு வரிசையில் நின்றது போல, எதிர்மறையான எண்ணங்கள் என்னுடைய மனதில் நிரம்பி நின்றன. கடன் மீதான கவலை, என்னிடம் பிறர் கூறிய அன்பற்ற வார்த்தைகள், எங்கள் குடும்ப நபர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதத்தில் உதவ முடியாத நிலை என பல எண்ணங்கள் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது, இரயிலும் வந்தது. நான் பயங்கரமான மனநிலையில் இருந்தேன்.

இரயிலில் ஏறி உட்கார்ந்ததும் மற்றொரு சிந்தனை என் உள்ளத்தில் வந்தது. என்னுடைய புலம்பலையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி தேவனிடம் கொடுக்கும்படி தோன்றியது. என்னுடைய குற்றச்சாட்டுகளையெல்லாம் என்னுடைய குறிப்பேட்டில் கொட்டியபின்னர், நான் என்னுடைய தொலைபேசியை எடுத்து நான் சேமித்து வைத்துள்ள துதிபாடல்களைக் கவனித்தேன். அவற்றை நான் முடிக்கும்முன்பே என்னுடைய மனநிலை முற்றிலும் மாறியது.

சங்கீதம் 94 ஐ எழுதியவர் நியமித்துள்ள வகையின்படியே நானும் ஏறக்குறைய பின்பற்றி வருகின்றேன். சங்கீதக்காரனும் முதலில் தன்னுடைய குறைகளைக் கொட்டித் தீர்க்கின்றார். “பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்... துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? (சங். 94:2,16). அவன் தேவனிடம், விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் இழைக்கப்படும் அநீதத்தைப் பற்றி பேசும்போது எதையும் மறைவாக வைக்கவில்லை. தன்னுடைய புலம்பலையெல்லாம் தேவனிடம் கொடுத்துவிட்ட பின்பு, அந்த சங்கீதம் தேவனைப் போற்றும்படி மாறுகிறது. “கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்" (வச. 22) என தேவனைப் போற்றுகின்றார்.

நாமும் நம்முடைய புலம்பலையெல்லாம் தன்னிடம் கொண்டுவரும்படி தேவன் அழைக்கின்றார். அவரே நம்முடைய பயம், கவலை, உதவியற்ற நிலை யாவையும் துதியாக மாற்றுபவர்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சோதனைகளை மேற்கொள்ளுதல்

ஆனி, வறுமையிலும் வேதனையிலும் வளர்ந்தார். அவளுடைய இரண்டு உடன்பிறப்புகள் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர். ஐந்து வயதில், ஒரு கண் நோய் அவளை ஓரளவு பார்வையற்றதாகவும், படிக்கவோ எழுதவோ முடியாமல் ஆக்கினது. ஆனிக்கு எட்டு வயதாக இருந்தபோது, அவரது தாயார் காசநோயால் இறந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவளை துஷ்பிரயோகம் செய்த அவளது தகப்பனார், மூன்று குழந்தைகளை ஆதரவற்றவர்களாய் விட்டுவிட்டார். இளைய பிள்ளை வேறு உறவினர்களுடன் தங்கிக்கொள்வதற்கு அனுப்பப்பட்டது. ஆனியும் அவளது சகோதரரும் அரசு நடத்தும் அனாதை இல்லத்திற்குச் சென்றனர். சில மாதங்களுக்குப் பிறகு, ஜிம்மியும் இறந்துவிட்டான். 
பதினான்கு வயதில், ஆனியின் சூழ்நிலைகள் பிரகாசமாகின. அவள் பார்வையற்றோருக்கான பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். அங்கு அவள் பார்வையை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்துகொண்டு படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டாள். அவள் அந்த இடத்தில் வாழ்வதற்கு சிரமப்பட்டாலும், அவள் கல்வியில் சிறந்து விளங்கி, வாலிடிக்டோரியனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஹெலன் கெல்லரின் ஆசிரியை மற்றும் தோழியான ஆனி சல்லிவன் என இன்று நாம் அவளை நன்கு அறிவோம். முயற்சி, பொறுமை மற்றும் அன்பின் மூலம், ஆனி பார்வையற்ற மற்றும் காது கேளாத ஹெலனுக்கு பேசவும், பார்வையற்றோருக்கான பிரெய்லி படிக்கவும், கல்லூரியில் பட்டம் பெறவும் கற்றுக் கொடுத்தார். 
யோசேப்பும் தன் வாழ்க்கையில் பல சோதனைகளை கடக்க வேண்டியிருந்தது. பதினேழாவது வயதில், அவர் மீது பொறாமைப்பட்ட சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டார். பின்னர் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் (ஆதியாகமம் 37:39-41). ஆயினும் எகிப்து தேசத்தையும் அவனது சொந்த குடும்பத்தாரையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற தேவன் அவனைப் பயன்படுத்தினார் (50:20). 
நாம் அனைவரும் சோதனைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறோம். ஆனால் யோசேப்பு மற்றும் ஆனி ஆகியோருக்கு மற்றவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த தேவன் உதவியது போல, நமக்கும் உதவிசெய்து நம்மை பயன்படுத்த அவரால் கூடும். உதவிக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் அவரை சார்ந்துகொள்வோம். அவர் நம்மை பார்க்கிறார், கேட்கிறார். 

தேவனில் சாய்ந்துகொள்!

சில நண்பர்களுடன் நாங்கள் தண்ணீர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, காற்றடைக்கப்பட்ட தளங்களால் செய்யப்பட்ட மிதக்கும் தடைப் பாதையில் நடக்க முயற்சித்தோம். துள்ளலான, வழுக்கும் தளங்கள் மீது நேராக நடந்துசெல்வது என்பது சாத்தியமற்றது. சரிவுகள், பாறைகள் மற்றும் பாலங்கள் வழியாக நாங்கள் தள்ளாடியபோது, நாங்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்து கூச்சலிட நேரிட்டது. என் தோழிகளில் ஒருத்தி, முற்றிலும் களைத்துப்போய், மூச்சு விடுவதற்காக “கோபுரம்” ஒன்றில் சாய்ந்து இளைப்பாறினாள். அவளுடைய உடல் எடை தாங்க முடியாமல், மீண்டும் வழுக்கிக்கொண்டு வந்து தண்ணீரில் விழுந்தாள்.  
தண்ணீர் பூங்காக்களில் காணப்படும் இதுபோன்ற பெலனில்லாத கோபுரம் போலில்லாமல், வேதாகம காலகட்டங்களில் ஒரு கோபுரம் மிகவும் பாதுகாப்பானதாக திகழ்ந்தது. நியாயாதிபதிகள் 9:50-51, தேபேஸ் மக்கள் தங்கள் நகரத்தின் மீது அபிமெலக்கின் தாக்குதலிலிருந்து மறைந்து கொள்ள “பலத்த துருக்கத்திற்கு” எவ்வாறு விரைந்து ஓடினர் என்பதை விவரிக்கிறது. நீதிமொழிகள் 18:10இல், ஆசிரியர் தன்னை நம்புகிறவர்களை விடுவிக்கும் தேவனை பலத்த துருக்கமாய் உருவகப்படுத்துகிறார்.  
இருப்பினும், சில சமயங்களில், நாம் சோர்வாக இருக்கும்போது அல்லது காயப்படும்போது தேவனுடைய பலத்த துருக்கத்தின் மீது சாய்வதற்குப் பதிலாக, பாதுகாப்பு மற்றும் ஆதரவிற்காக - தொழில், உறவுகள் அல்லது உடல் வசதிகளுக்காக வேறு விஷயங்களைத் தேட நேரிடுகிறது. செல்வத்தில் பலம் தேடும் ஐசுவரியவான்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்ல (வச. 11). ஆனால் காற்றடைக்கப்பட்ட கோபுரம் எனது சிநேகிதியை தாங்க முடியாதது போல், இந்த விஷயங்கள் நமக்கு உண்மையில் தேவையானதை கொடுக்க முடியாது. ஆனால் சர்வ வல்லமையுள்ள, சகலத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தேவன் நமக்கு மெய்யான ஆறுதலையும் பாதுகாப்பையும் தருகிறார். 

தேவன் போதுமானவர்

எலன், பண நெருக்கடியில் இருந்தாள். எனவே கிறிஸ்மஸ_க்கு கிடைக்கும் போனஸ் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தாள். அவள் பெற்றுக்கொண்ட பணம் அவளுடைய தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவள் அந்த பணத்தை வங்கியில் போடும்போது, அவனுக்கு மற்றுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. கிறிஸ்மஸ் பரிசாக, வங்கி தனது ஜனவரி மாத அடமானத் தொகையை தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாக அவளுக்கு அறிவிக்கப்பட்டது. இப்போது அவளும் அவளுடைய கணவரும் மற்ற செலவுகளை செய்யலாம். இன்னும் யாராவது ஒருவரை கிறிஸ்மஸ் பரிசுடன் ஆச்சரியப்படுத்தக்கூடும்.  
நாம் எதிர்பார்ப்பதை விட தேவன் நம்மை ஆசீர்வதிக்க அவருக்கு வழி தெரியும். நகோமி தனது கணவன் மற்றும் குமாரர்களின் மரணத்தால் கசப்பாகவும் உடைந்தும் இருந்தாள் (ரூத் 1:20-21). அவளது அவநம்பிக்கையான அந்த சூழ்நிலையை போவாஸ் மாற்றினார். போவாஸ் நகோமியின் மருமகளை மறுமணம் செய்து, அவர்கள் தங்குவதற்கான வீட்டையும் கொடுத்தார் (4:10). 
நகோமி எதிர்பார்த்ததும் அதுதான். ஆனால் பின்னர் தேவன் ரூத்துக்கும் போவாஸ{க்கும் ஒரு குமாரனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். நாகோமிக்கு “ஆத்துமாவுக்கு ஆறுதல்செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்” (வச. 15) என்று பேரன் கொடுக்கப்படுகிறான். அது அவளுக்கு மிகவும் போதுமானதாக இருந்திருக்கும். அதைப் பார்த்த பெத்லகேமின் ஸ்திரீகள், “நகோமிக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது!” (வச. 17) என்று சொன்னர்கள். பின்னர் சின்ன ஓபேத் வளர்ந்து, “தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பனாய்” ஆனார் (வச. 17). நகோமியின் குடும்பம் வரலாற்றில் மிக முக்கியமான வம்சமான இஸ்ரவேலின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தது! அதுவே போதுமானதாக இருந்திருக்கும். இருப்பினும், தாவீது இயேசுவின் முற்பிதாவாய் மாறினார். 
நாம் கிறிஸ்துவை விசுவாசித்தால், நகோமியின் ஆசீர்வாதங்கள் நமக்கும் கிட்டும். அவர் நம்மை மீட்கும் வரையில் நம்மிடத்தில் எதுவும் இல்லை. இப்போது நாம் நம் தகப்பனால் முழுவதுமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம். அவர் மற்றவர்களை ஆசீர்வதிக்க நம்மை ஆசீர்வதிப்பார். இது நம்மடைய தேவையைக் காட்டிலும் அதிகமானது.